சென்னை
மகாராஷ்டிராவைப் போல தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் உச்சத்தை தொட்டுள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை கணிக்க முடியாத அளவிற்கு உயர்வதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னை மண்டலத்தில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது அரசிற்கு மீண்டும் குடைச்சலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது. 3,043 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,856 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இன்று கொரோனா அறிகுறி தொடர்பாக 48,195 மாதிரிகளில், 47,179 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதிலிருந்து 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.