tamilnadu

பாஜக யாத்திரைக்கு தடை விதிக்க காங். வலியுறுத்தல்....

சென்னை:
பாஜக நடத்தும் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது.புகார் மனுக்கள் அளித்ததைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு தலைவர் கனகராஜ், ”பாஜகவினரின் ரத யாத்திரை என்பதே மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் செயல்படும் ஒன்றாகும். அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை போர்க்களமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

விசிக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள், ரத யாத்திரையை தடை செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில் காவல் துறையினர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் உள்ளனர். ரத யாத்திரை நடத்தப்பட்டால் காவல் துறையினர் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.ஏற்கனவே, சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே ரத யாத்திரையைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.