சென்னை, ஆக. 4 - பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மீது, குண்டுகளை வீசி இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலையும், அதற்கு ஆயுத உதவிகளை வழங்கும் அமெரிக்காவையும் கண்டிக்கும் வகையில், மனிதநேய ஜனநாயக கட்சியினர் சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக பேசிய தமிமுன் அன்சாரி, “காசாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இஸ்ரேலை எதிர்க்கும் அதே நேரத்தில், அதற்கு துணை போகும் அமெரிக்காவையும் எதிர்த்து கண்டனங்களை எழுப்பி வருகிறோம்” என குறிப்பிட்டார்.