தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்க இருக்கிறது. தமிழ்நாட்டில் 7,534 பள்ளிகளில் இருந்து மொத்தம் 8,20,207 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இதில் 3,89,736 பேர் மாணவர்கள், 4,30,471 பேர் மாணவிகள். மேலும், தனித்தேர்வர்கள் 5,000 பேரும், சிறைவாசிகள் 187 பேரும் தேர்வெழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 46,700 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மார்ச் 25-ஆம் தேதி முடிவடைகிறது.