சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். மூன்று அமைச்சர்களும் உடன் சென்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதந்தோறும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.இந்நிலையில் திங்களன்று மாலை 5 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகை சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.மேலும் அதிமுக கட்சிக்குள் மோதல் எழுந்துள்ள நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.