tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

போப் பிரான்சிஸ் மறைவிற்கு முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி, ஏப்.21- போப் பிரான்சிஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் வாடிகன் நகரில் காலமானார் என்கிற செய்தி பெரும் துயரத்தை அளிப்பதாக உள்ளது. உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு  12 ஆண்டுகளாக இறைப்பணி ஆற்றிய அவர், வாடிகன் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான மாற்றங்களையும் கொண்டு வந்தவர். அன்னை தெரசா உள்ளிட்டவர்களை புனிதராக அறிவித்தவர். ஏழைகள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மனிதநேயர். எளிமை, அன்பு மற்றும் சமூக நீதிக்காக முக்கியத்துவம் கொடுத்த அவர், எளிய வாழ்க்கை முறைக்காக அனைவராலும் விரும்பப்பட்டவர். போப் பிரான்சிஸ் அவர்களது இழப்பு மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரது இழப்பால் துயருறும் கத்தோலிக்க கிறித்துவ சகோதர சகோதரிகளின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மாவுக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தோழர் மதிவாணன் காலமானார்

திருவண்ணாமலை, ஏப்.21 திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்வசூர் கிளையின் முன்னாள் கிளை செயலாளரும், விவசாய சங்க ஒன்றிய தலைவருமான மதிவாணன் ஞாயிறன்று (ஏப்.20) காலமானார்.  அவரின் உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவகுமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் இரா.சிவாஜி,  போளூர் வட்டக் குழு செயலாளர் இரா.இரவிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சாலையோர பனை மரங்கள் தீக்கிரை: விஷமிகள் கைவரிசை

கள்ளக்குறிச்சி, ஏப்.21- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையின் ஓரமாக கொட்டப்பட்டிருந்த எள் சருகுகளுக்கு மர்ம நபர்கள் திங்களன்று மதியம் தீ வைத்துள்ளனர்.  கடும் வெயிலில் காய்ந்த நிலையில் இருந்த எள் சருகுகள் வேகமாக எரிந்த நிலையில் தீயானது அருகில் இருந்த பனை மரங்களில் பற்றியது. இதில் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சாம்பல் ஆனது .இந்த தீ சம்பவம் காரணமாக அதிக அளவில் கரும்புகை எழுந்ததால் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அம்மரங்களில் வசித்துவந்த அரிய வகை ஆந்தைகள் அலறித்துடித்தன. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வாகனம் வராததால் தொடர்ந்து எள் சருகுகளும் பனை மரங்களும் எரிந்து சாம்பலானது.

இருசக்கர வாகனம் மீது  கார் மோதிய விபத்தில் மூவர் பலி

கடலூர், ஏப்.21- கடலூர் அருகே ராமாபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் நேரு (வயது 60) இவர் அதிமுக கிளை கழக செயலாளர் ஆக உள்ளார். இவரது மனைவி சுதா எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருந்தார். இந்நிலையில் இவர் தனது முந்திரி தோப்பில் வேலை செய்வதற்காக நாகியநத்தம் பகுதியை சேர்ந்த சரண்யா (வயது 25), கல்பனா ( 25), ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேருவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக் கல்லூரி  மாணவர் லாரி மோதி பலி

கடலூர், ஏப்.21-  பண்ருட்டி அடுத்துள்ள திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதானந்தம் மகன் யுவராஜ் (வயது 20) இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவர் கல்லூரியில் பிசியோதெரபி பிரிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இருசக்கர வாகனத்தில் திருத்துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்த யுவராஜ் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யுவராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.