சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு மின் கட்டணங்களை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மின்பளுவை குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும்.
தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 15 குறைத்து ஆணையிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ஆண்டிற்கு ரூ.145 கோடி தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
இதனால் சுமார் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன் பெற்று வருகின்றனர். நூற்பாலைகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மின்கட்டண முறையை மாற்றியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.