tamilnadu

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம்

 சென்னை,ஆக.11 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க 2 ஆண்டு களுக்கு ஒரு முறை உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம் பாக்கத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனைத்து வசதி வாய்ப்புகளும் உள்ளதை அவர்களுக்கு அரசு அதிகாரிகள் விரிவாக எடுத்துத்துரைத்தனர். சாலை வசதி, தண்ணீர், மின்சார வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அத்துடன் 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்பட்டு அனுமதி அளிக்கும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கிக் கூறினார்கள். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்ட மிட்டுள்ளார்.இதற்காக அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5 நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்க உள்ளார்.இதன் மூலம் எரிசக்தி துறை, ஆட்டோ மொபைல் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெருமளவில் கிடைக்கும் என மாநில அரசு எதிர்பார்ப்பதாக தொழில்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.

;