சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தி வருமாறு:-
கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா, தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவீரன்; சுதந்திர போராட்ட வீரர். அவர், உடல் நலக்குறைவால், இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட, முக்கிய வீரர்களில் ஜெயவீரன் குறிப்பிடத் தக்கவர்.அவரது தாயார் அஞ்சலை, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் இருந்தபோது, ஜெயவீரன் பிறந்துள்ளார். அவரது தந்தை முருகப்படை யாச்சியும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, பல முறை சிறை சென்றவர். அஞ்சலை அம்மாள், எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றி உள்ளார். ஜெயவீரன் குடும்பம் முழுவதும், நாட்டிற்காக பாடுபட்ட குடும்பம்.அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.