சென்னை விமானநிலையத்தில் பெல்டில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட ரூ. 1.3 கோடி மதிப்புள்ள, 2.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு வந்த ஒரு பயணி சுங்கவரி செலுத்தும் எந்த பொருள்களைக் கொண்டுவராத நிலையில், வெளியே செல்ல முற்பட்டுள்ளார். அப்போது, சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனே அந்த நபரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது இடுப்பு பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரிந்தது. மேலும், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை சுமார் 2.4 கிலோ இருக்கும் எனவும், இதன் மதிப்பு ரூ. 1.3 கோடி இருக்க கூடும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், குவைத்தில் விமான நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய இடுப்பு பெல்ட்டை எடுத்துக் கொண்டு, அவர்கள் வைத்து இருந்த புதிய இடுப்பு பெல்ட்டை மாட்டி விட்டதாகவும், இது போன்ற கடத்தல் தொழிலுக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும், இதைச் சென்னை விமான நிலையம் வெளியே வேறொருவர் தன்னை அடையாளம் கண்டு தங்கபெல்ட்டை பெற்றுக் கொள்வார் எனவும் இதன் மூலம் கை மாறியதும் உடனே உனக்கான பணம் சேர்ந்து விடும் எனவும் அவர் அளித்தார். மேலும் சம்பந்தப்பட்ட நபரின் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.