தமிழில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி
சென்னை,மே 29-பெங்களூருவைச் சேர்ந்த கன்ஃபர்ம்டிக்கெட் நிறுவனம், இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்க்க ரயில் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட முன்பதிவு சார்ந்த சேவைகளை தமிழ் உள்பட ஏழு மாநில மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷனை – தமிழ், `ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், மற்றும் பெங்காலி என 7 மாநில மொழிகளிலும், தேசிய மொழியான ஆங்கிலத்திலும் இனி பயன்படுத்தலாம். நாட்டில் மாநில மொழிகளில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 18விழுக்காடு வரை அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த இணைய சேவை பயனாளிகளில் 75விழுக்காட்டினர் , மாநில மொழிகளில் பயன்படுத்துவோராக இருப்பர் என கூகுள்- கே.பி.எம்.ஜி ஆய்வு தெரிவிக்கிறது. எனவே கன்ஃபர்ம்டிக்கெட் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் தமிழை அறிமுகம் செய்துள்ளது என்று அதன் தலைமை செயல் அதிகாரி தினேஷ் குமார் கோதா கூறியுள்ளார்.
அனைத்துலக உணவு மற்றும் சமையல் சாதனங்கள் பொருட்காட்சி
சென்னை, மே 29தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அறக்கட்டளை நடத்தும் அனைத்துலக உணவு மற்றும் சமையல் சாதனங்கள்வர்த்தக பொருட்காட்சி வைப்ரண்ட் தமிழ்நாடு என்ற பெயரில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பங்கேற்கும்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் தலைவர் எஸ்.ரத்தினவேலு கூறுகையில், இந்த பொருட்காட்சியில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வர்த்தகர்களும், 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாளர்களும் வருகை தந்து தமிழக உணவு பொருட்கள் மற்றும் இங்குதயாரிக்கப்படும் சமையல் சாதனங்களைப் பார்வையிட்டு ஒப்பந்தங்கள் செய்யவிருக்கிறார்கள். வேளாண் உற்பத்தியாளர்களும், உணவு பதனீட்டு தொழில் வணிகம் செய்பவர்களும் தங்கள் பொருட்களை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வாய்ப்புகளை வழங்கவிருக்கும் இந்த பொருட்காட்சி பெரும் உதவியாக இருக்கும், என்றார்.பொருட்காட்சியின் தலைவர் கே.திருப்பதிராஜன் கூறுகையில், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்கள் பொருட்காட்சியில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்களிடம் நேரில் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களது தேவைகளை தெரிந்து கொள்ள முடியும். எனவே சிறு வணிகர்கள் தங்களது வணிகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லஇந்த பொருட்காட்சி அவர்களுக்கு மிகவும் பயன்படும், என்றார்.