tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஜார்ஜ்டவுன் கூட்டுறவு வங்கி ஜூலை 27ல் பேரவைக்கூட்டம்
சென்னை,ஜூலை 23- ஜார்ஜ்டவுள் கூட்டுறவு வங்கியின் 94வது பேரவைக்கூட்டம் வரும் சனிக்கிழமை (ஜூலை 27) காலை 10.30 மணிக்கு தங்கசாலை தெருவில் உள்ள ஸ்ரீ தியாவத் ஜெயின் பவனில் (பஞ்சாப் நேஷ்னல் வங்கி அருகில்) நடைபெறவு ள்ளது. இந்த கூட்டத்தில் அ வகுப்பு அங்கத்தினர்கள் அனைவரும் கட்டாயமாக உறுப்பினர் அட்டையுடன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்பேரவை கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்தல், வங்கியின் 2016-17, 2017-18 ஆம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையை வாசித்து ஏற்பு செய்தல், 2016-17,2017-18 ஆம் ஆண்டுக்கான வங்கி ஈட்டிய நிகர லாபத்தை பங்கீடு செய்தல், 2018-19 ஆம் ஆண்டு வரவு செலவுகளை அங்கீகரித்தல், வங்கியில் 30.9.2013 வரை வழங்கப்பட்ட நகைக்கடன்களில் தவணை தவறிய மீட்கப்படாத நகைகளை ஏலம் விட்டதில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3லட்சத்து 96ஆயிரத்தி 20 குறித்து பரிசீலித்தல், குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையில் துணைவிதியில் திருத்தம் செய்தல், நிர்வாகக் குழுவினர் அனுமதித்த கடன்களை அங்கீகரித்தல் உள்ளிட்டவை குறித்து இந்தகூட்டத்தில் ஒப்புதல் கோரப்படவுள்ளது என்று துணைப்பதிவாளர் கே.இராஜகோபால், தலைவர் பொறுப்பு எம்.மகேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தரமற்ற உப்பை பெரும் விலைக்கு விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 
சென்னை, ஜூலை 23- தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களிலிருந்தும் டேபிள் உப்பை அகற்றுவதற்கு இரண்டாவது உப்புசத்தியாக்கிரகம் தேவை என்று அண்மையில் தனியார் இந்திய உப்புபிராண்டுகளை உப்பில் பொட்டாசியம் ஃபெரோசியானைடை உறிஞ்சும் எதிர்ப்பு பொருளாக பயன்படுத்துவது குறித்து கண்டறிந்த சிவசங்கர் குப்தா கூறியுள்ளார். யுனிவர்சல் அயோடைசேஷன் என்பது ஒரு பெரிய மார்க்கெட்டிங் வித்தை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உப்பை “அயோடைஸ் உப்பு” என்று விற்க சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது நம் நாட்டில் ஏராளமாகக் கிடைக்கும் இயற்கை உப்பு விற்பனையை நசிக்கியுள்ளது என்று 91 வயதான குப்தா தெரிவித்துள்ளார். இயற்கை உப்பில் மிதமான அளவு அயோடின் உள்ளது, எனவே செயற்கை அயோடின் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உப்பு சுத்திகரிக்கப்பட்டு, இயற்கையாகவே இருக்கும் அதன் அத்தியாவசிய கூறுகளை அகற்றும் போது, உப்பு உற்பத்தியாளர்கள் செயற்கை அயோடினை ஒரு உருமறைப்பாக அயோடின் நிறைந்ததாக சந்தைப்படுத்த பயன்படுத்துகின்றனர் ”என்று அவர் கூறினார். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் வணிக நோக்கங்களுக்காக, தரமற்ற உப்பை இந்தியாவில் பெரும் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர், இது மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. இயற்கை உப்பு நுகர்வு அவசியத்தை பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது என்கிறார் குப்தா. டி

ஜிட்டல் பணபரிவர்த்தனையில்சென்னைக்கு 6-வது இடம்
சென்னை, ஜூலை 23 இந்திய நகரங்களில், 2019 ஜூன் மாதத்துடன் முடிந்த மூன்று மாதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் சென்னை 6 வது இடத்தில் உள்ளது. சென்னையின் இத்தகைய பரிவர்த்தனைகள் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி-மார்ச் முதல் 2019 ஏப்ரல்-மே முதல் ஜூன் வரை 57 விழுக்காடு அதிகரித்துள்ளன. நாட்டின் முதல் ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் ரேஸர்பே சென்னையில் வெளியிட்ட நிதித்துறையில் அதிகரித்து வரும் தொழில்நுட்பம் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்கிறது. நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் எவ்வாறு டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்கின்றனர் என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது. ஜூன் மாதத்துடன் முடிந்த மூன்று மாதங்களில் சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 57விழுக்காடு அதிகரித்துள்ளது.இதில் உணவுத்துறை முதலிடத்தில் உள்ளது.

மருந்துக் கடையில் ஊசி போட்டவர் பலி
அம்பத்தூர், ஜூலை 23- அம்பத்தூர் அருகே உள்ள மாதனாங்குப்பம் கலெக்டர் நகர் 4ஆவது தெருவில் வசித்தவர் குமார் (42). இவர் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனா. குமாருக்கு கடந்த ஒருவார காலமாக தோள் பட்டையில் வலி இருந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அந்த மருந்து சீட்டுடன் சண்முகபுரம் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி மருந்துக் கடைக்கு சென்றுள்ளார். கடை உரிமையாளர் பாஸ்கரன் (52) அந்த மருந்து சீட்டில் உள்ளபடி மாத்திரைகளை வழங்கி, ஊசியும் போட்டுள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்தி லேயே வலிப்பு நோய் வந்து குமார் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து குமாரின் மனைவி மீனாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் வந்து குமாரை புழல் கேம்ப் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அண்ணா தெருவில் வசிக்கும் மருந்துக் கடை உரிமையாளர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அவர் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும், டி பார்ம் படிக்காமலேயே அனுபவத்தின் மூலம் வருவபவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குமார் எப்படி உயிரிழந்தார் என்பது தெரிய வரும்.