tamilnadu

சென்னை, திருவள்ளூர், சென்னை முக்கிய செய்திகள்

பிளாட்பாரத்தின் மீது ஆட்டோ புகுந்ததில் பெண் பலி

ராயபுரம்,நவ.5- சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் பிளாட்பாரத்தில் சிலர் வசித்து வருகிறார்கள். அவர்கள் இரவு பிளாட்பாரத்திலேயே தூங்குவது வழக்கம். திங்களன்று (நவ.4) இரவு பிளாட்பாரத்தில் வசிக்கும் அஞ்சலி (60). அவரது மகள் சித்ரா. பேரன் பரண். பேத்தி பவானி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் அதி காலை 3 மணி அளவில் சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தலம் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்ற தால் ஆட்டோவை டிரைவர் இடது புறமாக திருப்பினார்.  இதில் நிலைதடுமாறிய ஆட்டோ தாறுமாறாக ஓடி பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலி, சித்ரா, பரண், பவானி ஆகிய 4 பேர் மீது ஏறியது. இதில் அஞ்சலி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயத்து டன் கிடந்தனர். இவர்களை அருகே இருந்த மக்கள் மீட்டு  சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  ஆட்டோவை ஓட்டி வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த காளியப்பன் என்பவரை காவல்துறை யினர் கைது செய்தனர். 

இளைஞர்களுக்கான திறன் போட்டிகள்
திருவள்ளூர், நவ.5-  திருவள்ளூர் மாவட்ட அளவில் மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரி வித்துள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வருகிற 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடை பெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.  6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.  5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழிற் பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள், தற்போது படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால திறன்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இது தொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  இது குறித்து மேலும் விவரங்களை பெற உதவி இயக்குநர், திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் அவர்களை நேரில் அல்லது தொலைபேசியின் (044 - 29896032)  மூலமாகவோ தொடர்பு கொள்ளலாமென மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ரயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
சென்னை, நவ.5- சென்ட்டிரல் ரயில் நிலைய 8 வது பிளாட் பாரத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர் ஆய்வாளர் ரமேஷ்குமார் மாற்றும் காலவர் புகழேந்தி ஆகியோர் ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர்கள் 24 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாகீர், அப்சர் என்பது தெரிந்தது. இவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.