tamilnadu

img

அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி தீவிர புயல் இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று இரவு வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு வடக்கு - வடகிழக்கு திசையில் வடஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.22 முதல் 14.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டுப் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

10.05.22: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள மற்றும் லட்ச தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

11.05.22: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கி.மீ வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ வேகத்துலம் வீசக்கூடும்.

ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.