tamilnadu

img

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை செயற்குழுவில் கண்டிக்க அதிமுக தயக்கம்...

சென்னை:
அதிமுக செயற்குழு கூட்டம் அக் கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் திங்களன்று (செப் 28) அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்துள்ளது இந்த கூட்டத்தில் காணமுடிந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக தலைமை அலுவலகம் முன்பாக கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கூடினர்.  இந்த நிகழ்வின் போது ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்தபடி அவரது ஆதரவாளர்களும் ஈபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி அவரது ஆதரவாளர்களும் முழக்கம் எழுப்பினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்ட ஆதரவாக இருக்கும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றாமல் கர்நாடகாவை மட்டும் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல்வேறு விஷயங்களில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்ற வார்த்தையைக்கூட உபயோகப்படுத்தவில்லை. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்கிற கருத்தில் அதிமுக உறுதியாக இருக்கும் உள்ளிட்ட  தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.சுமார் 5மணி நேரம் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. முதல்வர்வேட்பாளரை இன்றே தேர்வு செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள் இந்த கூட்டத் தில் வலியுறுத்தினர். 

ஆனால்  கட்சிக்கு வழிகாட்டு குழுவை தேர்வு செய்தபின்னர் முதல் வர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறினர். இதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்காமல் கூட்டம் முடிந்தது. இருப்பினும் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு நிற்பது இந்த கூட்டத்தில் அப்பட்டமாக எதிரொலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.