tamilnadu

img

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் ஜூலை 9-க்கு ஒத்திவைப்பு

சென்னை:
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிய வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பைய்யா மற்றும்  கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின் பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. 

இந்த வழக்குகள்  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் மீண்டும் திங்களன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர்  ராஜகோபால், 27 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த  வழக்குகளை  தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்சநீதின்ற வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், நீட் இல்லாதபோது தொடரப்பட்ட அந்த வழக்கிற்கும், இதற்கும் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;