tamilnadu

img

மீனவர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வேட்பாளர் கலாநிதி வீராசாமி வாக்குறுதி

சென்னை, ஏப். 13- மீனவர்கள் நலன் காக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று கலாநிதி  வீராசாமி தெரிவித்தார். வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெரம்பூர்  37ஆவது வட்டத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு பொதுமக்கள், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக  தமிழ்நாட்டிற்காக எந்த நன்மையும் செய்யவில்லை. அதனால் தான் தமிழகம் வரும் போதெல்லாம் சாதனை களை சொல்லி ஓட்டு கேட்காமல் எதிர்கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்கிறார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுகிறார்கள்.

படகுகள், வலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதியும், மக்களவையில் மீனவ மக்களுக்காக நான் பலமுறை பேசியும் கூட, பாஜக பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முன்வரவில்லை. பாஜகவுக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும்  தொழிற்சாலைகளின் சமூக பாதுகாப்பு  நிதி என 6 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு  பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.

என்னை நீங்கள் மீண்டும் தேர்தெ டுத்தால், மென்மேலும் இதுபோன்ற பணிகளை தொடருவேன் என்றும், மீனவர்கள் நலன் காக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் கூறினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வழக்கறிஞர் சரவணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி  வெங்கடேசன், மதிமுக மாவட்டச்  செயலாளர் சு.ஜீவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.