சென்னை:
தமிழக அரசு நவம்பர் 12 வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம்என்பதால், பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பல்வேறு பொருட்களை வாங்க கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிகமாக கூடுகின்றனர்.
அவ்வாறு கூடும்போது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது, ஊடகங்கள் வாயிலாகவும், கள ஆய்வுகள் மூல மாகவும் அரசின் கவனத்திற்கு தெரியவருகிறது. வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்றானது இரண்டாம்அலையாக மீண்டும் பரவும் நிலையை நாம் காண முடிகின்றது. இச்சூழ்நிலையில் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் 16.11.2020 முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தற்போது இரத்து செய்யப்படுகிறது.அவற்றிற்கான தடை மறு உத்தரவுபிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.