மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு மதத்திற்கு எதிராகவும் கருத்துகளை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வகிக்கும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவை பகிர்ந்திருந்த சவுதாமணி தைரியமா? விடியலுக்கா? என்றும் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத் தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.