சென்னை,பிப்.27- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருந்தது. 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதாக வந்துள்ள செய்திக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:- பாலாறு ஒரு பன்மாநில நதியாகும். 1892 ஆம் ஆண்டைய மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டு மானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்பு வதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஆந்திர அரசு ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவ தாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும்.
இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும், இதற்கு முன்பு சித்தூர் மாவட்டம், கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை 2018 இல் முடிவடைந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது. இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணை களின் உயரத்தை அதிகரித்துள்ளது.
இதை எதிர்த்தும் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகத் தான் கருத வேண்டும்.
இந்த செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கும் ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கும் எதிரானது. எனவே, இருமாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு அணைகட்டும் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது.