tamilnadu

img

தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கியது தொடர்பான வழக்கில் தள்ளுவண்டி வியாபாரி மற்றும் ஏழு பா.ஜ.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க சார்பில் மனித சங்கலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி வைத்து பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலையோர வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கவும் முற்பட்டனர். இதையடுத்து வியாபாரி அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடியுள்ளார். இருப்பினும் கடைக்குள் புகுந்த பா.ஜ.க வினர் சாலையோர வியாபாரி முத்துச்சாமியை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை தடுத்து இரு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 
இந்த சம்பவம் குறித்து தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி மற்றும் 7 பா.ஜ.வினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி ரமேஷ் என்பவரை பல்லடம் போலிசார் கைது செய்தனர்.