tamilnadu

img

அவதூறு புகாரில் பாஜக மாநிலச் செயலாளர் கைது!

மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பிய பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார்.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பொய் செய்தியை தனது டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பி வந்தார். அச்செய்தியில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12ஆவது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு தொழிலாளி இறந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தை சார்ந்தவர் எனவும் பதிவிட்டிருந்தார். இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும். அச்சமும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். 

ஆனால், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாத போது வதந்தியை கிளப்பி, சமூக பதட்டத்தை ஏற்படுத்தி சாதி ரீதியான மோதலை தூண்டுவதோடு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வரும் எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அவதூறு பரப்பிய எஸ்.ஜி.சூர்யாவை, மதுரை தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை தி.நகரில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர்.