tamilnadu

img

நூலாற்றுப் படை

“எளியவர்களின் கதை”

இந்நூலின் பத்து சிறுகதைகளும் உலகத்துடன் ஒட்ட முடியாதவர்களின் தனிமை, குடும்பத்து டன் ஓட்ட முடியாத வர்களின் தனிமை, தன்னைத்தானே புரிந்து கொள்ள முடியாதவர்களின் தனிமை பற்றி பேசு கின்றன. நூலின் தலைப்புக்கும் நூலில் இடம் பெற்றுள்ள கதைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எளியவரின் காலை உணவு பெரும்பாலும் பழைய சோறு தான்.  முந்தைய இரவில் மிஞ்சிய சோறு தான் பழைய கஞ்சியாக மாறி இருக்கும்.  பழைய சோற்றின் இன்னொரு பெயர் “ஐஸ் பிரியாணி”.  எளிய உணவின் பட்டப்பெயரையே இந்நூலுக்கு தலைப்பாக சூட்டியுள்ளார் நூலாசிரியர்.

ஒரு கதையின் நாயகர்கள் பெரும்பாலும் வாழ்ந்து நொடித்து கொண்டிருக்கும் எளியவர்கள். அதி நவீன இயந்திர மனிதர்களை விட எளியவர்களிடம் தான் சுவாரசியம் கொட்டி கிடக்கிறது.

 அனைத்து கதைகளும் துயரம் கொண்டவை ஆனால் நகைச்சுவை நடையுடன் எழுதி இருப்பது நூலை கீழே வைக்காமல் தொடர்ந்து முழுவதும் படிக்கத் தூண்டுகிறது.  

அன்பற்ற, நாடற்ற, நிறைவற்ற வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படும்  மனிதர்களின் மனங்களை படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

நூல்: “ஐஸ் பிரியாணி” (சிறுகதை தொகுப்பு)
நூலாசிரியர்; கா. ரபிக் ராஜா
விலை : ரூபாய் 170
வெளியீடு :வாசகசாலை பதிப்பகம் 
சென்னை: 600073
தொடர்பு எண்: 9942633833

ஆண்கள் அவசியம் படிக்க  வேண்டிய நூல்

ஆண்மை - பெண்மை என்பதெல்லாம் இயற்கையில் வந்தவையா?  பெண்மை மட்டுமல்ல ஆண்மையும் கற்பிதம் தான் - பொய் என்று வாதாடுகிறது இந்த நூல்.  ஆண் உண்டு. ஆண்மை பொய். பெண் உண்டு. பெண்மை பொய் என்று வலுவாக பேசுகிறது  இந்நூல்.

 ஒரு பொய்யின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த ஆணாதிக்க சமூகம் இற்று வீழும் கனவை முன்வைத்து வாதாடும் இந்த நூல் ஆண் எடுத்துக் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற சுதந்திரம் பெண் உடல் மீது அவள் அடிமைப்பட்ட வரலாற்றின் மீது -கட்டி  எழுப்பப்பட்டுள்ளது என்கிறது

இந்த நூல். அதை பெண் இன்று உணரத் தொடங்கி உள்ளதை - அவள் கோபத்துடன் எல்லாவற்றை யும் பார்க்கத் தொடங்கி விட்டதை ஆண் இன்னும் உணரவில்லை என்று குற்றம் சாட்டுகிறது. பெண் சமத்துவம் குறித்து அக்கறைமிக்க விவாதங்கள் மிகக் குறைந்த அளவிலே நம் மத்தியில் நடைபெற்று வருகிறது.

விவாதங்களை அதிகரிக்கவும் ஆண் பெண் சமத்துவத்தை நிலை நிறுத்தவும் இந்த நூல் பெரிதும் பயனளிக்கும்.இந்த நூல் ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

“பெண்மை”  என்றொரு கற்பிதம்...

நூலாசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
விலை:ரூபாய் 70/
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
சென்னை-600018. தொடர்பு எண்; 044 2433242

புதிய முறையில் சிறுவர்களுக்கான கணிதம்
நிறைய கட்டுரைகள்  இருந்தாலும் புத்தகமாக  வெளியாகியுள்ளது இதுவே முதல்முறை. சீட்டுக்கட்டுகளுடன் விளையாட்டு என்றாலே அது ஆபத்தானது.

அதனைப்போய் எப்படிக் குழந்தைகள் கையில் கொடுக்கலாம் எனச் சிலர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு.  சீட்டுக்கட்டுகள், கணிதம் கற்றுக்கொள்ள மிக நல்ல கருவி. அட்டகாசமான துருப்புச்சீட்டு.

அது பல எளிய விளையாட்டுகளால் நிரம்பியது.  ஏராளமான அடிப்படை கணிதங்களைக் கற்றுக்கொடுக்கும் வல்லமை கொண்டது. அதே போல நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது.காலந்தோறும் வேறு வேறு வடிவங்களை எடுத்து ள்ளது.  வேறு வேறு கைகளில் தவழ்ந்துள்ளது.இந்தப் புத்தகம் யாருக்கானது?  

இதுகணிதம் கற்க விரும்பும் குழந்தைகளும் கணிதம் கற்றுத்தர விரும்பும் ஆர்வலர்களுக்கும் அதுபோல் சின்ன வயதில் கணிதம் என்றாலே கசப்பு எனக் கருதியவர்களுக்கும் மட்டுமல்ல . நமது  எல்லோருக்குமானதேயாகும்.

“சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்” நூலாசிரியர்கள் : விழியன் மற்றும் சரண்யா

வெளியீடு :  புக்ஸ் ஃபார் சில்ரன்
சென்னை -600018
தொடர்பு எண்: O44 24332424
விலை : ரூபாய் 150-

சூழியல் பிரச்சனைகளை அறிய
பூமிக்கு யார் சொந்தம் நூல் தமிழ் பசுமை இலக்கிய இலக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள மிக அருமையான படைப்பு. இயற்கை, பல்லுயிர்கள், பரிணாமம், சூழியல்  குறித்த அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு.பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

பூமியில் வாழும் அனைத்து பல்லுயிர்களுக்கும் சொந்தமானது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. நமக்கு இருந்த முக்கியமான சூழல் பிரச்சனை யாக சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமே இருந்தது.

தற்போது இயற்கை மீதான பெரு நிறுவனங்களின் சுரண்டல்,  காலநிலை, அவசரநிலை,  பெருகிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக், உருக்குலையும் சூழல் சார் சமூக நீதி என நம்மைச் சுற்றி சூழியல் பிரச்சனைகள் கொட்டிக் கிடக்கிறது.

 சமகால சூழல் பிரச்சனைகளை டார்வின் - மார்க்சிய பார்வையில் அணுகும்போது தீர்வை நோக்கி எளிதில் செல்ல முடியும் என்பதை நூல்  ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நூல் இது.

“பூமிக்கு யார் சொந்தம்?”
நூலாசிரியர் : செ.கா. 
விலை ; ரூபாய் 160.
வெளியீடு: புத்தக கடை. காம்
Perunthurai-638052.
தொடர்பு எண்: 9790133141

அறிவியல் மனப்பான்மைக்கான உற்சாகக் குரல்!

ஸ்டாலின் சரவணன் 
மாவட்ட செயலாளர், தமுஎகச, புதுக்கோட்டை.

“பிரபஞ்சம் தோன்றியது எப்படி? யானைகள் அழிவது ஏன்? தாய்க்கும் சேய்க்கும் இடையே நிற்கும் ஹார்மோன் எது? மரங்கள் பேசுமா? உங்கள் நண்பர்கள் பட்டியலில் செடிகள் உண்டா?” இப்படி பல கேள்விகளுக்கு ஒரு கட்டுரைத் தொகுப்பு பதில் தருகிறது. “தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்-அறிவியல் சினிமாக்களின் அறிமுகத் தொகுப்பு” என்னும் இந்நூல் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பெரும் பணிக்கானது.

இத்தொகுப்பில் உள்ள 43 கட்டுரைகளும் “நமது அறிவியல்” மாத இதழில் கவிஞர் எஸ் இளங்கோவால் எழுதப்பட்டவை. ஒரே மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்த கட்டுரைகள் என்பதால் அனைத்துக் கட்டுரைகளும் கச்சிதமாகவும் சிறப்பான சொல்லல் முறையோடும் அமைந்துள்ளன. அறிவியல் கட்டுரை தொகுப்பு என்பதால் வாசிப்பதற்கு கடினமாக அமைய வில்லை. கட்டுரைகள் எழுதப்பட்ட முறை படிப்பவரை தேங்க விடாமல் இழுத்துச் செல்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதிகம் அறியப்படாத அறிவியல் செய்திகளைத் தருகின்றன.

கவிஞர் எஸ் இளங்கோ, உலக சினிமாக்களைத் திரையிடுவது, எழுதுவது என்று களமும் எழுத்துமாக சினிமாவுக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர். ஆனாலும் வழக்கமான அவரது எழுத்து நடையில் இருந்து மாறுபட்டு எளிமையாக மாணவர்களுக்கும் புரியும் விதத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தங்கு தடையற்ற வாசிப்பிற்கு ஏதுவாகின்றன. ஒவ்வொரு திரைப்படத்தையும் அப்படம் முன்வைக்கும் உரையாடல்களோடு கூடுதலாக முன்னும் பின்னும் கருத்துக்களை இணைத்து எழுதியுள்ளார்.

அறிவியல் செய்திகளை பாலின பேத, சுற்றுச்சூழல் சார்ந்த அரசியலோடு சேர்த்து கவனமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “இசையின் வயது 40000 ஆண்டுகள்” என்ற கட்டுரையில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பறவை எலும்பால் புல்லாங்குழல்கள் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது.

அதே வேளையில் நமது உடலின் அதிசயங்களை கூறும் கட்டுரை நமது உடல் குறித்தே நாம் அறியாத பல செய்திகளைத் தருகிறது. “நமது ஆயுள் காலத்தில் நமது வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாம்” என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை தராமல் போகுமா!? இப்படி ஒவ்வொரு படமும் பல அறிவியல் தகவல்களைத் தருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் தந்துள்ளார் நூலாசிரியர். பொதுவாக கவிஞர்கள் எழுதும்  கதைகளில் கூட கவித்துவம் எட்டிப் பார்த்து விடும். நூலாசிரியர் எஸ். இளங்கோ கவிஞ ராக அடைமொழியோடு அழைக்கப்பட்டாலும் கட்டுரைக்கான மொழிநடையில் சிறிதும் பிறழாமல்  எழுதியுள்ளார்

.“எதிர்காலவாதிகள்” என்ற கட்டுரை ஸ்டீவன் ஸ்பீல் பர்க் இயக்கிய ‘மைனாரிட்டி ரிப்போர்ட் ‘திரைப்படம் பற்றியது. அது நம்மை ஒரு கால இயந்திரத்தில் அமர்த்தி 2054- க்கே அழைத்துச் செல்கிறது‌. கட்டுரையில் நிறைய ஆச்சர்யங்கள் நிறைந்த செய்திகள் இருக்கின்றன. தனிமனித, கூட்டு வாழ்க்கை முறையில் தொழில்நுட்பங்கள் எத்தகைய ஆதிக்கத்தை செலுத்த இருக்கின்றன என எழுதப்பட்டுள்ளது. அதேநேரம் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற மரபு வழி நோய்களை முழுவதுமாக ஒழிக்கும் விதமாக மருந்துகள் அக்காலத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் என்ற செய்தி நமக்கு பெரும் ஆறுதலைத் தருகிறது.

மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதில் இருக்கும் ஒரே பிரச்சனை ஒரே கணவன் அல்லது மனைவியோடு ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வாழ முடியுமா!? என்று அப்படத்தின் இயக்குநர் கேட்பதில் நகைச்சுவை இருக்கிறது. அதே நேரம் அதில் ஒரு நியாயம் இல்லாமல் இல்லைதானே!? பாம்பும் பயமும், அறிவுப் பறவை, சிலந்திக் குரங்குகள் ஆகிய உயிரினங்கள் மீதான நேசத்தை வலியுறுத்தும் பல கட்டுரைகள் அதைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை நமக்கு உணர்த்துகின்றன. மரங்கள், கடல் வளம் குறித்த அக்கறையைப் பேசும் சூழல் பிரச்சனையை பேசும் கட்டுரைகளும் மிக முக்கியமானவை. அன்பு என்பதும் ஹார்மோனின் விளைவே என்று எடுத்துக் கூறும் “தாயன்பு” கட்டுரை, ஒரு குழந்தையிடம் தாயின் அன்பு, தந்தையின் அன்பை எவ்வாறு மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லச் செய்கிறது ,அதற்குத் துணை செய்யும் ஹார்மோன்கள் குறித்தெல்லாம் தெளிவாக முன் வைக்கிறது.

ஒவ்வொரு கட்டுரை பேசும் படத்தையும் ஓடிடி தளம் ,யூடியூப் என எதன் மூலமாகப்  பெறலாம் என்பதையும் நூலாசிரியர் தந்துள்ளார்‌.மேலும் அப்படங்களுக்கான இணைய லிங்க் கோடையும் அடுத்த பதிப்பில் கூடுதலாக அச்சில் இணைக்கலாம். கவிஞர் எஸ். இளங்கோ இத்தொகுப்பில் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரை குறித்தும் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு திருத்தமான, நேர்த்தியான எழுத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இப்புத்தகத்தை மாணவர்கள் அனைவரின் கைகளில் சேர்ப்பதும் அறிவியல் மனப்பான்மை மிகுந்தோரின் பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது.

பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் சமகால எழுத்தின் வழியாக எழுப்ப வேண்டிய குரலின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்படும் நிலச்சரிவிற்குத் தீர்வாக அங்கு இருக்கும் மக்கள் இறைச்சி உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும் என்பதை ஐஐடி இயக்குநர் லஷ்மித்தார் மெஹரா என்பவர் ஒரு விழாவில் பேசுகிறார்.

‘இந்திய தொழில்நுட்ப கழகம்’ என்பது பொறியியல் துறையில் தலைசிறந்த ஒன்று. அதன் இயக்குநர் ஒருவரே அறிவியல் மனப்பான்மைக்கு நேர் எதிராக ஒரு கூற்றை இவ்வாறு முன் வைக்கிறார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத பரப்புரைகளும் மதவாதத்தை முன்னிறுத்தும் அரசியலும் அரசதிகாரப் பற்களோடு நம் முன் கெக்கலித்து நிற்கும் சவாலான காலம் இது. இச்சூழலில் தெளிவான தரவுகளோடு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமான ஆவணப்படங்கள் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் நிறைந்த இத்தொகுப்பு இக்காலத்தின் பெரும் தேவை.

“தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்”
அறிவியல் சினிமாக்களின் அறிமுக தொகுப்பு 
ஆசிரியர்: எஸ்.இளங்கோ 
வெளியீடு: நமது அறிவியல் பதிப்பகம், புதுக்கோட்டை.
விலை ரூ.150/-