உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டை கடந்தும் தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் கூறியதாவது:
"10 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. உயர்நீதிமன்ற மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டு ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் உயர்த்தாமல் உள்ளனர். முதல் 1.5 கி.மீ.க்கு 50 ரூபாயும், அடுத்தடுத்த கி.மீ.க்கு 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும்.
தில்லி, மகாராஷ்டிரா அரசுகளை போல் இருச்சக்கர டாக்சியை தடை செய்ய வேண்டும். சட்டத்தை மீறி செயல்படும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை தடைசெய்து ஆட்டோக்களுக்கான செயலியை அரசே உருவாக்கி நடத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை எதிர்த்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவதை கைவிட வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.