சென்னை, அக்.14- தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் அறிகுறியுடன் சென்னையில் தினமும் 500 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தினமும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். டெங்கு அறிகுறி உள்ள 150 முதல் 200 வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சராசரியாக 40 முதல் 50 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி, கீழ்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புறநோயாளிகளாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் உப்பு கரைசல் கொடுக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு தடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 11 மாத குழந்தை மற்றும் பள்ளி மாணவியைத் தொடர்ந்து 21 வயது இளம்பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மனைவி சங்கீதா காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்புகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல் தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் டெங்கு காய்ச்சல் மறுபுறம் மக்களை பயமுறுத்தி வருகிறது. வடசென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வரும்முன் காப்பாற்ற சுகாதாரத்துறை போதிய கவனம் செலுத்தவில்லை. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால், காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்கிறார்கள். மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது மக்கள் மத்தியில் கடும்கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.