பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் என்ற புத்தகம் சேர்க்கப்பட்டது. முதுகலை ஆங்கிலம் படிப்பில் 3வது செமஸ்டரில் இந்த புத்தகம் பாடமாக சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது என்று பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குற்றம் சாட்டியது. மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் கருத்துகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று ஏ.பி.வி.பி. அமைப்பின் தமிழக இணை செயலாளர் சி.விக்னேஷ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு பதிலாக வேறொரு பாடம் சேர்க்கப்பட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.