சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவட்டார் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் சகாய ஆன்றனியை தாக்கிய சமூக விரோதக்கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், கன்னியாகுமரி மாவட்ட சிஐடியு தலைவர்களுள் ஒருவரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான தோழர் சகாய ஆன்றனி புதனன்று இரவு தனது வழக்கமான கட்சிப்பணிகளை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்கு சற்று அருகாமையில் இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் ஒரு கும்பல் கொலைசெய்யும் நோக்கத்தோடு அவரை தலை, உடம்பு மற்றும் இதர பாகங்களிலும் கடுமையாக தாக்கியுள்ளது. இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவரவே அக்கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி பெற்ற தோழர் சகாய ஆன்றனி, தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சமூக விரோதக்கும்பலின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாககண்டிக்கிறது. தாக்குதலுக்கு காரணமான வர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.