tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்கிட தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இப்படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை கொலைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமெனவும் இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கும், தொழில்முறை கூலிப்படையினர்களின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கிடும் வகையில்  காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் கொட்டத்தை அடக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதுபோல் சென்னை மாநகரம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும் முறையில் செயல்படும் தொழில்முறை ரௌடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.