சென்னை,பிப்.16- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்திற்கு ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
ஆண்டு தோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. பணியாளர்களை தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும்.
இதில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அவர்கள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவன ருள், ஐஆர்எஸ் அதிகாரி சர வணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்று ஆளுநர் மாளிகை தெரி வித்துள்ளது.