tamilnadu

சென்னை எண்ணூர் அருகே கோரமண்டல் உர தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு!

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் அமோனியாவை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் திரவ அமோனியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் அமோனிய தேங்கியிருந்த குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளை விட்டு வெளியே வந்த,30க்கும் மேற்பட்ட மக்களுக்கு மூச்சுத்திணறல், உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எண்ணூர் அமோனியா வாயு வெளியேறி சிரமத்துக்கு உள்ளானதால் கோரமண்டல் உரத்தொழிற்சாலை முன்பு மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரமண்டல் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 500கும் மேற்பட்ட மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்யும் பணியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம் அடைந்துள்ளது.

எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையைத் தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, பொதுசுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.

அமோனியாவை எடுத்துச் செல்லும் குழாயில் குறைபாடுகள் இருப்பதால் கப்பலில் இருந்து திரவ அமோனியாவை இறக்கும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலையில் நேற்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து கடல்சார் வாரியத்துக்கு கோரமண்டல் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.   குறைபாடு சரிசெய்யும் வரை எண்ணூர் சிறு துறைமுகத்தில் இருந்து ஆலைக்கான கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

லேசான தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்; இறப்பு ஏற்படும் அளவுக்கு அமோனியா இல்லை என அண்ணா பல்கலை. வேதிப்பொறியியல் துறை தலைவர் கே.வி.ராதா தெரிவித்துள்ளார்.

10,0000 முதல் 50,000 பிபிஎம் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாயுக்களை கொண்டு செல்லும் எச்டிபிஇ பைப் லைனில் அமோனியா கசிவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறினார்.

இந்த விவகாரத்தில் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழக கடல்சார் வாரியம் ஆகியவற்றை இணைத்து வல்லுநர் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.