சென்னை,செப்.10- முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 75 விழுக்காடு எம்பி பிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை.
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 7918 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. முதல் சுற்று கலந்தாய்வில் 2150 இடங்களே நிரம்பின. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 771 எம்.பி.பி.எஸ். இடங்களில் 597 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மொத்தம் 771 இடங்கள் உள்ளன. இதில் 175 இடங்கள் நிரம்பியுள்ளன. 596 இடங்கள் நிரம்பவில்லை. 137 இடங்கள் மெய்நிகர் காலியிடங்கள் உள்ளன. அதன்படி 22.7 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன.
சுயநிதி பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 3550 இடங்களில் 2285 இடங்கள் நிரம்பியுள்ளன. அதன்படி 64 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன. இதனால் இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு வாய்ப்புள்ளது.