tamilnadu

img

அனைத்து நீதிமன்றங்களையும் உடனே திறக்க வேண்டும்... தலைமை நீதிபதியிடம் பார் கவுன்சில் கோரிக்கை

சென்னை:
அனைத்து நீதிமன்றங்களையும் உடனே திறக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கினால் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்கள் காணொலி காட்சி மூலமாகவே வழக்குகளை விசாரித்து வருகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் கோரிக்கையுடன் கூடிய மனு தலைமை நீதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டது.பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், 
"கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயர்நீதிமன்றத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கறிஞர்களை அனுமதிக்காதது வேதனை அளிக்கிறது" என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழக்குகள்  காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய பார் கவுன்சில், தமிழ்நாட்டில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் கடந்த 8ஆம் தேதி ஆலோசனை நடத்தியது.காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இணைய வசதியின்மையால் அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அதனால், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் திறக்க வேண்டும். நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றங்களைத் திறந்து நேரடி விசாரணை நடைபெறாத காரணத்தால், குடும்ப நல நீதிமன்ற வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள் என பல வழக்குகள் தேங்கியுள்ளன. விபத்து வழக்கில் இழப்பீட்டை பெற முடியாமல், வழக்குகளில் தீர்வு கிடைக்காமலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.எங்களது கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங் களையும் திறக்க வேண்டும் என்ற  கோரிக் கையை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உடனே பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு நீதிமன்றங்கள் திறக்கும்பட்சத்தில் உலக சுகாதார மையம் அறிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் வழக்கறிஞர்கள் தீவிரமாக பின்பற்றுவார்கள் என்றும் அமல் ராஜ் தெரிவித்தார்.

;