tamilnadu

பாஜக அரசின் வாகனச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை,செப்.19- மோட்டார் தொழிலை முடக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைக் கண்டித்தும் சுங்கக் கட்டணம் உயர்வு, டீசல் விலை உயர்வு, 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தியும்  செப்டம்பர் 19 அன்று நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடவில்லை.  இப்போராட்டத்தை   அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் லாரிகள் ஓடவில்லை.  கரூர் மாவட்டத்தில் 1800 லாரிகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள்  வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.  சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரம்  லாரிகளும் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட லாரிகளும்  தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியூர் உள்ளூர் லாரிகள் என 2500 லாரிகள் இயக்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.