tamilnadu

img

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு...

சென்னை:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30 ஆம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கையை தொடர்ச்சியாக கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும் 30 ஆம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2020-2021) இளங்கலை படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப். 30 ஆம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;