சென்னை:
புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாவிட்டால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு பல்வேறு மாநிலங் களிலிருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு வெளி
யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களுக்கு இடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம்,1979-ன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அனைத்து வேலையளிப்போரும் பணியமர்த்தப்பட்ட புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசால் இதற்கெனபிரத்யேகமான வலைதளம் (labour.tn.gov.in/ism ) ஒன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சில வேலையளிப் போர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.