tamilnadu

img

பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன பிரதமருக்கு ஒரு பதில் கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர் களின் பிறந்தநாளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்துச் செய்தி அனுப்புவது வழக்கம். அந்த வகையில், மார்ச் 16 அன்று மேதகு குடியரசுத்தலைவர் அவர்களும்,  மாண்புமிகு பிரதமர் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு வாழ்த்துகளை அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்.

திருச்சியில் இருந்து  ஏ.மரியம் பீவி என்பவர் ஓரிரு வாரத்துக்கு முன்பு  எனக்குநன்றி சொல்லி எழுதிய கடிதமொன்றி னை, எமது நாடாளுமன்ற அலுவலகத் தோழர்கள் தந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினரின் பணிக்காக எனக்கு எழுதப்பட்ட கடிதம் தான் அது. அதில் இருந்த வார்த்தைகள் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாதவை. வலிநிறைந்த அனுபவ மொன்றிலிருந்து மீள உதவியமைக்காக நிறைந்த அன்பாலும், அளவிட முடியாத நன்றியுணர்வாலும் எழுதப்பட்ட கடிதமது.
அக்கடிதத்தை படித்து முடித்த சிறிது நேரத்தில் தான் பிரதமரின் வாழ்த்துக் கடிதம் கைக்கு வந்தது. இரண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வந்து சேர்ந்த கடிதங்கள் தான்.ஒரு புறம் பிரதமரின் வார்த்தையும், இன்னொருபுறம் மரியம் பீவியின் வார்த்தையும் என் கண்களுக்கு முன்னால் இருந்தது. மரியம் பீவி தனது பிறப்புச்சான்றிதழ் கேட்டு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளாக இடைவிடாது முயற்சிக்கிறார். திருச்சியில் இருக்கும் அவர் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரைக்கு எண்ணற்ற முறை வந்து செல்கிறார். ஆனால் மாநகராட்சி அலுவலர்களோ ஏதேதோ காரணம் சொல்லி சான்றிதழ் தருவதை தவிர்க்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் நான் கலந்து கொள்வதாக விளம்பரத்தைப் பார்த்து என்னை நேரில் சந்தித்து மனுகொடுக்க வந்துள்ளார். ஆனால் அப்போராட்டத்துக்கு நான் செல்ல இயலவில்லை. அச்செய்தி அவரை மிக சோர்வடையச்செய்துள்ளது. உடன் இருந்த தோழர் ஒருவர் அந்த மனுவை எனக்குதபாலில் அனுப்பிவைக்க சொல்லி யுள்ளார். அரைமனதோடு அவர் தபாலில் எனக்கு அனுப்பிவைத்துள்ளார்.

எமது அலுவலகத்துக்கு கடிதம் வந்ததும் உடன் மாநகராட்சி அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். மரியம் பீவியை தொலைபேசியில் அழைத்து அலுவலகத்துக்கு வரச்சொல்லி பிறப்புச் சான்றிதழை கொடுத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துத் தான் மரியம் பீவி அவர்கள் எனக்குஇக்கடிதம் எழுதியுள்ளார்.மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களே, ஒருவர் தான் பிறந்த சான்றிதழ் வாங்க இரண்டு ஆண்டுகள் இடைவிடாதுமுயற்சி செய்கிறார். அப்பொழுதும் அவருக்கு அச்சான்றிதழ் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்ட பின்னரே அவருக்கு அச்சான்றிதழ் கிடைக்கிறது.

அச்சான்றிதழைப் பெற்றுத் தந்ததை தனது உயிருள்ளவரை மறக்கமாட்டேன் என்று உணர்வு மேலிடக் கூறுகிறார். என்பொருட்டும், என் நலம் வேண்டியும்  இறைவனை தொழுது கண்ணீர் சொரிகிறார்.அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தைக் குள்ளும் இருப்பது பிறப்புச்சான்றிதழ் பெற இரண்டு ஆண்டுகள் அவர் அடைந்த துன்பமும், வலியும் தான். அந்தத் துன்பமே அளப்பரிய செயலை நான் செய்துள்ளதாக அவரை நம்பவைக்கிறது. இதற்கு கைமாறு செய்ய இறைவனின் ஆசியைக் கோருகிறது.
பிரதமர் அவர்களே, முன்பின் முகம் பார்த்தறியாத அந்தச் சகோதரி எனக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும் வழங்க இறைவனை மனமுருகிப் பிராத்திக்கும் அளவுக்கு நான் அவருக்கு எதுவும் செய்துவிடவில்லை. என் அலுவலகத்துக்கு வந்த ஒரு கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு அனுப்பிவைத்தேன். அது மட்டுமே நான் செய்தது. இச்சிறுபணிக்கு உயிருள்ள வரைமறக்கமுடியாத நன்றியை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அப்பணி செய்ய முடியாமல் அவர்களை தடுத்துக் கொண்டிருக்கும் சுவர்கள் எவ்வளவு வலிமையானதாக இருக்கும்?

மாண்புமிகு பிரதமர் அவர்களே, தனது பிறப்புச்சான்றிதழ் பெறவே இவ்வளவு துன்பப்பட வேண்டிய நிலையில் மரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும் இருக்கிறார்கள். நீங்களோ அவர்களுடையப் பெற்றோரின் பிறப்புச்சான்றிதழையும் சேர்த்துக் கேட்கிறீர்கள்.மாண்புமிகு பிரதமர் அவர்களே, எனக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் “உங்களின் வளமான பல்வேறுஅனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின்உயர்வுக்கு உதவட்டும்” என்று குறிப்பிட்டுள்ளீர்களே, அந்த வார்த்தையில் இருக்கும் உண்மையைப் பற்றிக் கேட்கிறேன். சிஏஏ வை திரும்பப் பெறுங்கள், என்பிஆர், என்ஆர்சி யை கைவிடுங்கள். உங்களின் நலனுக்காக வும், வளத்துக்காகவும் இறைவனைத் தொழஎண்ணிலடங்காத எளிய மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் உயர்வுக்கு அது பேருதவியாக இருக்கும்.

நாம் வாழ்கிற காலத்துக்கும், வகிக்கிற பொறுப்புக்கும் அர்த்தம் இருக்கிறது. அது மக்களின் துயர்நீங்க உழைப்பதும், அவர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக இத்திருநாட்டினை மாற்றுவதும், இச்செயல்பாட்டில் மேலும் என்னை விசைகூட்டிக்கொள்ள இந்நாளில் கிடைக்கப் பெற்ற வாழ்த்துகள் அமைந்திருந்தன.வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட மைக்காக மீண்டுமொரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சு.வெங்கடேசன்
நாடாளுமன்ற உறுப்பினர்.
சிபிஐ(எம்), மதுரை

;