சென்னை, நவ.6- தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 76 வயதான ஒரு முதிய நோயாளிக்கு இரு மருத்துவ சிகிச்சையை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
ஆசிரியராகவும், விவசாயியாகவும் முன்பு பணியாற்றிய அவர் 2013-ம் ஆண்டில் இதய பகுதியில் பாதிப்புக்காக செயற்கை வால்வு பொருத்திக்கொண்டார். சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்கோ சோதனை, அந்த செயற்கை வால்வு சிதைவடைந்திருப்பதையும், கடுமையாக குறுகியிருப்பதையும் வெளிப்படுத்தியது. அத்துடன், வலது இதயத்தில் மிக அதிக (கடுமையான நுரையீரல் மிகை இரத்த அழுத்தம்) என்ற பிரச்சனையும் இவருக்கு இருந்தது. இந்த வால்வை மாற்றுவதற்காக இரண்டாவது அறுவைசிகிச்சையை செய்வது, இவரது முதுமை மற்றும் உடல்நிலையின் காரணமாக அதிக ஆபத்தானதாக இருந்ததால், அறுவை சிகிச்சையின்றி தொடை வழியாக ஊடுருவி டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் மாற்று சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எதிர்பாராத விதமாக வீட்டில் கீழே விழுந்ததனால், இடதுகாலில் தொடை எலும்பின் கழுத்துப் பகுதியில் (உடைந்த இடுப்பெலும்பு) எலும்பு முறிவு ஏற்பட்டது இவரது நிலையை சிக்கலாக்கியது.
இதனால் இடுப்பெலும்பு மற்றும் இதயம் சார்ந்த இரு மருத்துவ செயல்முறைகளையும் ஒரே பொது மயக்க மருந்து (அனஸ்தீசியா) வழங்கலின் கீழ் மேற்கொள்வதே ஒரே பாதுகாப்பான வழி யாக இருந்தது. ஹைபிரிட் (கலவை), கேத்லேப் அறுவைசிகிச்சை அறையில் முதலில் டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் செயல்முறையையும் மற்றும் அதைத் தொடர்ந்து இடதுபுற முழு இடுப்பெலும்பு மாற்று சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மூத்த இதயவியல் நிபுணர் டாக்டர். அனந்தராமன் தெரிவித்தனர்.
இத்தகைய வசதியும், திறனும் இந்தியாவில் வெகுசில மருத்துவ மையங்களில் மட்டுமே கிடைக்கிறது என்று மருத்துவமனையின் எலும்பியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர். கே.முகுந்த் கூறினார். “பல உடல்நலச் சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கு கூட, அறுவைசிகிச்சை உத்திகளில் நிகழ்ந்துள்ள புதிய முன்னேற்றங்கள், சிகிச்சைகளை அதிக பாதுகாப்பானதாக மாற்றியிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.