tamilnadu

img

எட்டுவழிச் சாலை: எடப்பாடி பிடிவாதம்

சென்னை:

எட்டு வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாகக் கூறியுள்ளார்.


சேலம் விமான நிலையத்தில் மே 20 திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அதிமுக அரசு அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.


இதனை எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கும் எடுத்துக்கொள்ளலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது எப்படி விவசாயிகளை பாதிக்கிறது என்று எடுத்துக் கொள்கிறீர்கள்? சாலைகள் இல்லாமல் எப்படி பயணம் செய்ய முடியும். திமுக ஆட்சியில் 786 கிலோ மீட்டர் சாலைள் அமைத்தனர். அப்போது விவசாயிகள் யாரும் பாதிக்கப்படவில்லையா? அந்தந்த காலகட்டத்திற்கு தக்கவாறு சாலைகள் அமைத் தால்தான் விபத்துக்களை குறைக்க முடியும். மேலும் தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து, “முன்பு ஒரு லட்சம் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலையில் தற்போது 4 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. அதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் உண்டாகின்றன. அந்த சாலைகள் அமைக்கப் படுவதற்கு எப்படியும் 5 வருடங்கள் ஆகிவிடும். அப்போது வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சம் ஆகிவிடும். இவற்றை கருத்தில்கொண்டு மக்களின் நன்மைக்காகவே சாலைகளை அமைக்கிறோம். எட்டுவழிச் சாலைக்கு 7 சத விகிதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்று கூறினார்.


சாலை போடுகிறோம் என்ற பெயரில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பசுமையை அழிக்கிறார்கள் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இவை அனைத்துமே நாம் நட்டதுதான். அனைத்தையும் மீண்டும் உருவாக்க முடியும். மனிதர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதது எதுவும் இல்லை. ஆனால் உயிர்போனால் வராது.தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு சாலைகள் அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. மக்கள் நினைப்பதைத்தான் அரசு செயல்படுத்தும்” என்று பதிலளித்தார்.

;