தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர், இரண்டு பெரிய அட்டைப்பெட்டிகளுடன் வந்துள்ளார்.
இதை அடுத்து அவரை நிறுத்திய சுங்க அதிகாரிகள் அவர் கொண்டு வந்த இரண்டு அட்டைப்பட்டிகளை திறந்து பார்த்தனர். அதில், நேரத்துக்குத் தகுந்தார் போல் நிறங்களை மாற்றிக் கொள்ளும் (Baby Iguana) என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பச்சோந்திகள், பச்சை,நீலம், மஞ்சள், மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உயிருடன் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள், உடனடியாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின காப்பகம் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, உடனடியாக வந்த வன உயிரின காப்பக குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த ஆப்பிரிக்க வகை பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். மேலும் அதைக் கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த பச்சோந்திகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்திக் கொண்டு வரப்பட்டது என்று தெரிந்தது.
அதில், 402 பச்சோந்திகள் இருந்த நிலையில் 67 பச்சோந்திகள் அட்டைப்பட்டிக்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தன. மேலும், இந்த பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இங்குப் பரவி விலங்குகள், பறவைகள், மற்றும் மனித உயிரினம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது எனத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் உயிருடன் இருந்த 335 பச்சோந்திகளை இன்று காலை தாய்லாந்து விமான மூலம் திருப்பி அனுப்பினர். பின் சட்ட விரோதமாக இந்த பச்சோந்திகளைக் கடத்தி வந்தவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.