tamilnadu

போதைப் பொருட்கள் விற்பனை

அம்பத்தூர், டிச. 31- ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்த 3 பேரை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தேநீர், மளிகை உள்ளிட்ட சிறு கடைகளில் விற்பனை செய்து வருவதை காவல் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட சோதனையில் மாங்காடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மாங்காடு, தெற்கு காமாட்சி நகர், 2ஆவது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (44), ஆவடி அருகே உள்ள பூச்சி அத்திப்பட்டு பஜார் தெருவைச் சேர்ந்த பிரதாப்சிங் கிறிஸ்டோபர் (34), அம்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் ஜேபி நகரைச் சேர்ந்த ஜெயபாலன் (41) ஆகிய 3 பேரை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் தொடர்ந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தும், விநியோகம் செய்தும் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் மூவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை காவல்துறையினர் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.