திருவொற்றியூரில் போதைப்பொருள் வைத்திருந்த
3 பேர் கைது சென்னை, மார்ச் 1- திருவொற்றியூரில் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை சோதனை செய்த போது, அவரது பேண்ட் பாக்கெட்டில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவொற்றியூர் பகுதியைச் - சேர்ந்த கார்த்தி (28) என்பதும், இவரும் திருவொற்றியூரை சேர்ந்த மதன் (30), கிஷோர் (26) ஆகியோருடன் சேர்ந்து எம்கேபி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இந்த போதை பொருளை மொத்தமாக வாங்கி அதை சில்லறையில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். மேலும் இதை விநியோகம் செய்த பெண்ணிடம் சென்று காவல் துறையினர் விசாரித்தபோது, அந்த பெண், தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், என்னுடைய மகனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரது மகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால்தான் எங்கிருந்து இந்த போதை பொருளை வாங்குகிறார், வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்பது தெரிய வரும்.