சிவகங்கை சிராவயலில் மஞ்சுவிரட்டுப் போட்டியில் உயிரிழந்த முத்துமணி மற்றும் சிறுவன் பாஸ்கரன் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகங்கை சிராவயலில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கர் காலை முட்டியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.அதைப்போலவே, முத்துமணி என்பவரும் மாடு முட்டி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்ததோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியீடப்பட்டுள்ள அறிக்கையில் ” சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் முத்துமணி, பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.