அம்பத்தூர், செப். 7- ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியில் ஒன்றிய அரசின் ஓசிஎப் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பி.சம்பத் காண்ட்ராக்டர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சி.தேவன், மோசஸ் ஆகியோர் இன்று (செப். 7) ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தொட்டிக்குள் இறங்கிய மோசஸ் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்க தொட்டிக்குள் விழுந்த தேவனும் மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இருவரும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மோசஸ் பலியானார். தேவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன்படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெறுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.