சென்னை, மார்ச் 16- மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச்செல்ல அனு மதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவை சந்தித்து சந்தித்து சனிக்கிழமை (மார்ச் 16) மனு அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி முறைகளை தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் கையாள்வதன் காரணமாக அடித்தட்டு, நடுத்தர வணிகர்கள் தான் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் பொருள் இழப்பு, பண இழப்பு, மன உளைச்சல், வாழ்வாதார இழப்பு போன்றவற்றிற்கு வணிகர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.
மாநில தேர்தல் ஆணையர், அரசு அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அளித்து, தற்போது இருக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றின் அடிப்படையில், ரொக்க கொள்முதலுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச்செல்ல அனுமதி அளிக்க வேண்டும். அழுகும் பொருட்களான காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட குறைந்த பட்சம் ரூ2 லட்சம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும், வணிகர்கள் உரிய விற்பனை பட்டியலுடன் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து கைப்பற்றுவதும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி, காலதாமதம் செய்வதையும் தவிர்க்க வேண்டி, தேர்தல் நடை முறையை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மதுரையில் மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 41ஆவது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடு மே 5ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநிலம் முழுவதும் உள்ள பேரமைப்பு நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு சம்பந்தமான விளம்பரங்கள், பதாகைகள் அமைப்பதில் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் தேர்தல் அதிகாரிகள் எங்களின் மாநாட்டு பணிகளில் எவ்வித குறுக்கீடும் செய்யாமல் அரசியல் சார்பற்ற வணிகர்கள் சார்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டினை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க, தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.