tamilnadu

img

ஊரடங்கை மீறினால் 144 தடை உத்தரவு  கடுமையாக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை

 சென்னை, ஏப்.3- தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சென்னையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை வெள்ளியன்று (ஏப்.3) ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ளது. தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு , மருத்துவ வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. தமிழகத்தில் மூன்று முகாம்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.  1.18 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மொத்தமாக வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 1,18,336. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 3409 பேர், உணவகங்களில் 7,801 பேர், பண்ணைகளில் 4,953 பேர் என ஒட்டுமொத்தமாக 1,34,569 வெளி மாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை 7, 198. அவர்களை பாதுகாக்க அந்தந்த மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலங்களில் இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழக அரசு இந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சிலர் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். நோயின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும். இதுவரை கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 
கடும் நடவடிக்கை 
ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்த அல்ல. மக்களைக் காக்கவே. ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். ஒவ்வொரு உயிரும் அரசு முக்கியம். இதுவரை மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு, ஊரடங்கை மீறும்பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஊரடங்கை தேவையில்லாமல் மீறினால், 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
 

;