சிறுத்தை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சென்னை, ஜன. 7- நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தலூர் அருகே ஏலமன்னா மற்றும் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு பெண்மணி மற்றும் 3 வயது சிறுமி என இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். இதனால் பொது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை ஆட்கொல்லி சிறுத்தையாக அறிவித்து சுட்டுப் பிடிக்க வேண்டும் என கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தேவாலா, நாடுகாணி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.
அதேபோல், கூடலூர் பகுதியில் இயங்கும் லாரி, ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் என அனைத்து தரப்பினரும் வாகனங்களை இயக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 860 காவல்துறையினர் கூடலூர் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலைமதிப்பில்லா உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜன.13 வரை
மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை, ஜன. 7- ஜனவரி 13ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜன. 8 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஜன. 9 தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 10ஆம் தேதி தென்தமிழ கத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.