சென்னை, மே 9- ஒரு கோடி ரூபாய் மதிப்பு திமிங்கலம் எச்சம் வைத்திருந்த மீனவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எண்ணூர் காவல் துறையினர் எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியில் புதனன்று இரவு ரோந்து சென்றனர்.
அப்போது நேதாஜி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப் படும்படி நின்ற நபரை பிடித்து காவல்துறை யினர் விசாரணை நடத்திய போது அவர் பதற்றத்துடன் பேசியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர் நாகப்பட்டினம் சாமந்தன் பேட்டையை சேர்ந்த சிலம்பரசன் (33) என்பதும், மீனவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது பையில் வைத்திருந்த கிரிஸ் போன்ற பொருள் குறித்து விசாரித்தபோது, அது அம்பர்கிரிஷ் எனப்படும் திமிங்கலத்தின் எச்சம் என்பது தெரிய வந்தது.
கடந்த வாரம் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் திமிங்கலத்தின் எச்சம் கிடைத்துள்ளது. திருவொற்றியூரில் உள்ள தனது மைத்துனர் சோபன் என்பவரை சந்தித்து இதனை விற்பது குறித்து ஆலோசித்து விட்டு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது சிக்கியுள்ளார். சிலம்பரசன் வைத்திருந்த சுமார் 800 கிராம் எடை கொண்ட திமிங்கலம் எச்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருவள்ளூர் மாவட்ட வனத்துறை அதிகாரி யிடம் ஒப்படைத்தனர்
. இதன் மதிப்பு 1 கோடி இருக்குமென கூறப்படுகிறது.