tamilnadu

img

அட்டாக்ஸியா பாதிப்பால் பெண் புலி பலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்த 13 வயது அரிய வகை வெள்ளை புலி உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடுகளை தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

விலங்குகளுக்கு சிறிதாக ஏதாவது நோய்த் தொற்று பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் விலங்குகளை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மேலும் தினமும் விலங்குகளின் உடல் நிலை குறித்த விவரங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 13 வயதான பெண் வெள்ளை புலி உடல் சோர்வுடன் இருந்ததை கண்ட மருத்துவர்கள் உடனடியாக அதை பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அட்டாக்ஸியா என்ற நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர் உடனடியாக மருத்துவர்கள் புலிக்கு தேவையான மருத்துவ உதவிகளை தொடர்ந்து அளித்து வந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,  அட்டாக்ஸியா என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு கோளாறு  பலவீனமான தசை ஒருங்கிணைப்பின் திடீர் தொடக்கத்தால் விலங்குகளுக்கு இந்த பதிப்பு ஏற்படுகிறது என்றனர்.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக நோய்த் தொற்றால் புலி பாதிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வெள்ளை புலி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளைப்புலி எந்தவித உணவும் எடுத்துக் கொள்ளாமல் சோர்வாக காணப்பட்டது. மருத்துவர்கள் பல்வேறு மருத்துவ உதவிகள் அளித்தும் எந்தவித முன்னேற்றமும் வெள்ளைப்புலி உடலில் ஏற்படவில்லை. இதனையடுத்து வெள்ளைப்புலி புதனன்று  இரவு 9 மணி அளவில் கூண்டில் உயிரிழந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடைத்துறை மருத்துவர்களின் தலைமையில் வெள்ளைப் புலிக்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக தெரிவித்தார்