1960 - எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) தொடங்கப்பட்டது. 1940களில் உலகின் மிக அதிக எண்ணெய் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் அமெரிக்கா இருந்தது. உலகின் எண்ணெய் உற்பத்தியின் பெரும்பகுதி செவன் சிஸ்டர்ஸ் என்று குறிப்பிடப்பட்ட ஏழு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவற்றில் ஐந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்தது. அவையும்கூட, ராக்ஃபெல்லரின் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தின் ஏகபோகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிரிக்கப்பட்ட நிறுவனங்களே. மத்திய கிழக்கு நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் அப்போதுதான் உற்பத்தியைத் தொடங்கியிருந்தன. இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளிலிருந்து விடுபடத் தொடங்கியிருந்த நிலையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஓர் அமைப்பு தேவை என்று வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகள், இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. 1959 பிப்ரவரியில் எண்ணெய் நிறுவனங்கள், வெனிசுவேலாவிலிருந்தும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பெறப்படும் எண்ணெயின் (கொள்முதல்) விலையைத் தன்னிச்சையாகக் குறைத்தன. இதைத் தொடர்ந்து, அவ்வாண்டின் இறுதியில், அரபு லீக், முதல் அரபு பெட்ரோலிய மாநாட்டைக் கூட்டியது. இதில் சந்தித்த, அமெரிக்கா, சோவியத் அல்லாத மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான வெனிசுலா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், விலை, உற்பத்தி ஆகியவற்றில் முடிவெடுக்க எண்ணெய் ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க மற்ற நாடுகளை வலியுறுத்தினர்.
1960 ஆகஸ்டில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் மத்திய கிழக்கின் எண்ணெய் விலையைக் குறைத்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 10-14 தேதிகளில் நடைபெற்ற பாக்தாத் மாநாட்டில், வெனிசுலா, சவூதி அரேபியா, ஈரான், இராக், குவைத் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்டு OPEC உருவாக்கப்பட்டது. பின்னர் உறுப்பினரான நாடுகளில் இந்தோனேஷியா, கத்தார் ஆகிய நாடுகள் 2 மில்லியன் டாலர் ஆண்டுச் சந்தா செலுத்த விரும்பாமை, உற்பத்தி வரம்புகளுக்கு கட்டுப்பட விரும்பாமை போன்ற காரணங்களால் வெளியேறி, தற்போது 14 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையிடம் பாக்தாத், அல்லது பெய்ரூட்-ஆக இருக்க வேண்டுமென்று மத்திய கிழக்கு நாடுகள் விரும்பினாலும், நடுநிலை நாடொன்றில் இருக்க வேண்டுமென்ற வெனிசுலாவின் வலியுறுத்தலின்படி ஜெனீவா(ஸ்விட்சர்லாந்து) தலைமையிடமாக்கப்பட்டது. ஆனால், சிறப்பு வசதிகளை அந்நாடு வழங்காததால், 1965இல் தலைமையிடம் வியன்னா(ஆஸ்திரியா)வுக்கு மாற்றப்பட்டு, இன்றுவரை அங்கேயே செயல்படுகிறது.