சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் பரவத் துவங்கி உள்ளது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,936 லிருந்து 77,150 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் அறிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தென் கொரியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.